சென்னை: பள்ளிக்கல்வித்துறை, சிவ்நாடார் அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், சிவ் நாடார் அறக்கட்டளை நிர்வாகிகள் சுந்தர், பேனர்ஜி, மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையில் சிவ் நாடார் அறக்கட்டளை மூலம் நிறுவப்பட உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் உலகத் தரம் வாய்ந்த கல்வியை இந்த ஒப்பந்தம் மூலம் பெறுவார்கள். மேலும், ஊரகப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் இந்த ஒப்பந்தம் வாயிலாக உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி படித்து சிறந்த கல்விச் சூழலையும், கல்வி கற்கும் திறன் மேம்படுவதற்கான பயிற்சியையும் பெறுவார்கள். மாணவிகள் 50 சதவீத வாய்ப்பு பெறுவார்கள் என்பது உறுதி. மாணவர்கள் தகுதியான உயர்கல்வியை தொடர்ந்து படித்து, வருங்காலத்தில் அறிவுத் திறன் மிக்கவர்களாக வளர்வதற்கு இந்த ஒப்பந்தம் பேருதவியாக இருக்கும்.
கிராம மாணவர்கள் உலகத்தரகல்வி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம்
previous post