நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி அருகே கஜா புயலின் போது இயற்கை சீற்றங்களில் பாதுகாப்பு அரணாக இருந்த மணல் திட்டுகள் மற்றும் மரங்கள் சேதம் அடைந்ததை மீண்டும் கருங்கற்கள் கொட்டி மரங்கள் நட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாங்கண்ணி அருகே புதுப்பள்ளி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. புதுப்பள்ளியில் இருந்த 5 கிலோ மீட்டர் து£ரத்தில் கடற்கரை பகுதி அமைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கடுமையாக தாக்கிய கஜா புயலுக்கு முன்பு இந்த பகுதியில் வனத்துறை சார்பில் இருந்த மரங்கள் புதுப்பள்ளி கிராமத்தை அதிக அளவு பாதிப்பில் இருந்து காப்பாற்றியது.
இதற்கு வனத்துறையினர் தற்காலிக பணியாளர்கள் மூலம் அந்த மரங்களை பராமரித்து வந்து தான் காரணம். இதனால் புதுப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக மரங்கள் விளங்கி வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலால் மணல் திட்டுகள் சேதமடைந்துடன் பாதுகாப்பு அரணாக விளங்கிய சவுக்கு மரங்கள் முற்றிலும் முறிந்து சேதம் அடைந்தது. அதன்பின்னர் இன்று வரை வனத்துறை சார்பில் அப்பகுதியில் புதிதாக மரக்கன்றுகள் நடப்படவில்லை.
இதனால் கடல் காற்று மற்றும் சூறாவளி புயல் போன்ற பலத்த காற்று வீசும் போது புதுப்பள்ளியில் கடற்கரையோரம் வசிக்கும் பகுதிகள் உள்ள கூரை வீடுகளின் கீற்றுகள் காற்றில் பறந்து விடுகிறது. ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் காற்றால் உடைந்து பெரும் சேதம் ஏற்படுகிறது. எனவே புதுப்பள்ளியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நிம்மதியாக வசிக்க முடியவில்லை. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: கஜா புயலுக்கு பின்னர் புதுப்பள்ளி கிராமத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டி இருந்த மரங்கள் மற்றும் மணல் திட்டுகள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது.
இதனால் திடீரென காற்று வீசும் போது எங்கள் வீடுகளின் கூரைகள் பறந்து விடுகிறது. இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் தினம் தினம் வாழ்ந்து வருகிறோம். இந்த அச்சத்தை போக்க வனத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் மரக்கன்றுகள் நட்டு தடுப்பு அணைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.புதுப்பள்ளி கிராமத்தில் உள்ள சக்கிலியன் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஏற்படும் மண்அரிப்புகளை தடுக்க கருங்கற்களை கொட்டி தடுப்பு அரண்கள் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில் இருந்து புதுப்பள்ளி கிராமத்தை முற்றிலும் பாதுகாக்க முடியும் என்றனர்.