Saturday, June 1, 2024
Home » கிராமத்துக் கீரைகள்!

கிராமத்துக் கீரைகள்!

by Lavanya

கோழிக்கீரை

இது கோழிப்பசலை என்றும் அழைக்கப்படுகிறது. வேலிகளில் வளரும் கொடி வகையைச் சார்ந்தது. துவட்டியும், கூட்டு செய்தும், கடைந்தும் உண்ணுகின்றனர். இதன் சுவைக்காக இதனை விரும்பி உண்போர் உண்டு. இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்று நம்புகின்றனர்.

சட்டிப் பசலை

சதைப்பற்றுள்ள இலைகளையும் தண்டுகளையும் கொண்டு தரையோடு வட்ட வடிவில் படர்ந்து வளரும் சிறுகொடி இது. வயல்களில் களையாகவும், தரிசு நிலங்களிலும் வளரும். இதனைச் சாறு வேளை என்றும் குறிப்பிடுகிறார்கள். இதில் புளியூற்றிக் கடைந்து உண்ணலாம். பருப்புடன் கடைந்தும், பூண்டு சேர்த்து கடைந்தும் உண்ணலாம். மலமிளக்கியாகவும், சிறுநீர் பெருக்கவும் பயன்படுகிறது. செடி முழுமையும் உலர்த்திப் பொடித்து, சிறிது சுக்குத்தூள் கலந்து சாப்பிட்டால், உடலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறும். சிறுநீரை அதிகப்படுத்தும். இக்கீரையைச் சமைத்து உண்டால் இதயம், மண்ணீரல், சிறுநீரகம் ஆகியவற்றை நன்கு செயல்பட வைக்கும். நீர்க்கோவை, பெருவயிறு ஆகிய நோய்களைக் குணப்படுத்தும் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

சட்டிச் சாரணை

சற்று நீள் வடிவ சதைப்பற்றான இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் கொடி வகையைச் சார்ந்தது இந்த சட்டிச் சாரணை. இதையும் சட்டிப் பசலையைப் போன்றே சமைத்து உண்ணலாம். இதன் இலை மருத்துவப் பயனுடையது. வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கும். பசியைத் தூண்டி சாப்பிட வைக்கும். இந்த இலைச்சாற்றைத் தாய்ப்பாலுடன் கலந்து கண்ணுக்கு மைபோல் தீட்டிவரக் கண்நோய் அனைத்தும் தீரும். இலைச்சாற்றைப் பாலில் கலந்து சாப்பிட வீக்கம், வயிற்று வலி, வயிற்று உளைச்சல் ஆகியவை தீரும். இலையை நெய் விட்டு வதக்கிப் பக்குவப்படுத்தி உண்டு வர பசியின்மை, நீர்க்கட்டு, வயிற்று உளைச்சல், வீக்கம், வயிற்று வலி ஆகியவை தீரும்.

சடைச்சி

இதன் இலை வட்ட அடுக்கில் சிறிய அளவிலும், குறுகியதாகவும் இருக்கும். முனைகளில் வெண்மையான பூங்கொத்துக்களைக் கொண்டு, தரையோடு படர்ந்து வளரும் செடி வகையைச் சார்ந்தது. இக்கீரையைக் கலப்புக் கீரையாக, பிற கீரைகளுடன் துவட்டி உண்ணுகின்றனர். இலையை விடவும் இதன் வேர் அதிக மருத்துவக் குணம் உடையது.

சாம்பார்பசலை

சற்று தடித்த இலைகளையும், தண்டையும் உடைய செடி வகை இது. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதனை பருப்புக்கீரை என்றும் அழைக்கிறார்கள். பருப்புடன் சேர்த்து சாம்பார் வைத்து உண்ணப்படுகிறது.

சிறு கீரை

இது, சிறு இலைகளையும் பூக்களையும் உடைய கீரை இனமாகும். பருப்புடன் சேர்த்து சாம்பார் செய்து உண்ணுகின்றனர். இலை, வேர் இரண்டுமே மருத்துவக் குணமுடையவை. சிறுநீர் பெருக்கும் குணமுடையது. உடம்புக்கு அழகையும் உண்டாக்கும் என பதார்த்த குணபாடம் கூறுகிறது. சிறுகீரையைச் சமைத்து உண்டால் சிறுநீர் பெருகி உடலிலுள்ள நீர்க்கோவை தீரும். சிறுகீரை வேர், நெருஞ்சில் வேர், சிறு பூளை வேர், சீரகம் ஆகியவற்றை தலா 40 கிராம் கலந்து பொடித்து, ஒரு லிட்டர் நீரில் இட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி இரண்டு பங்காகக் காலை, மாலை குடித்துவரக் கல்லடைப்பு தீரும்.

தண்டுக்கீரை

அகலமான இலைகளையும், தடித்தத் தண்டுகளையும் கொண்ட இந்தக் கீரையை வீட்டுத் தோட்டங்களிலும் வயலில் ஊடு பயிராகவும் பயிரிடுகிறார்கள். சந்தைகளில் விற்பதற்காக வணிக நோக்கிலும் பயிரிடப்படுகிறது. இதன் கீரை, தண்டு இரண்டுமே உணவாகப் பயன்படுகின்றன. கீரையைத் துவட்டியும், புளியிட்டுக் கடைந்தும், பூண்டு சேர்த்துக் கடைந்தும் உண்ணுகின்றனர். இதன் தண்டைப் பிற காய்கறிகளுடன் கலந்து சாம்பார் வைத்து உண்ணலாம்.

தவசி முருங்கை

சற்று வட்ட வடிவமான சிறு காம்புடன் இலைகளையுடைய சிறு செடிதான் தவசி முருங்கை. இக்கீரையைத் துவட்டி உண்ணுகிறார்கள். செடி முழுவதும் மருத்துவக் குணமுடையது. இதன் இலைச் சாற்றைச் சிறிதளவு காலை, மாலைச் சாப்பிட்டு வர சளி, இருமல் ஆகியவை தீரும். செடியை உலர்த்திப் பொடித்துச் சர்க்கரையும் தேனும் கலந்து உண்டால் சளி, இருமல் தீரும். அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு இலையை வதக்கிக் கட்ட, வலி குறைந்து குணமாகும் என மக்கள் நம்புகிறார்கள்.

தாளிக் கீரை

இதய வடிவிலான இலைகளை உடைய கொடி வகைக் கீரை இது. வேலிகளிலும், கரும்பு வயல்களிலும் வளர்ந்து படரக்கூடியது. இது நறுந்தாளி என்றும் குறிப்பிடப்படுகிறது. பச்சையாகவும் உண்ணலாம். சமைத்தும் ஒருசிலர் உண்ணுகின்றனர். இலை மருத்துவ குணமுடையது. தாதுக்களின் கொதிப்பையும் எரிச்சலையும் தணிக்கும். காமம் பெருக்கும் தன்மையுடையது. இலைகளைப் பருப்புடன் சேர்த்துக் கூட்டாகச் சமைத்து நெய் சேர்த்து உணவுடன் சாப்பிட்டு வர தாது பலப்படும்.- இரத்தின புகழேந்தி.

You may also like

Leave a Comment

18 − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi