கோவை: விஜயகாந்துக்கு பத்மவிபூஷன் விருது வழங்காமல் அவமதிக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்து உள்ளார்.
தமிழக பாஜ முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பிரதமர் மோடி சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாக இருக்கிறார். அவர் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர் அல்ல. இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது. முத்தலாக் சட்டம் கொண்டு வந்து பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார். இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்ள விசா நடவடிக்கைகளை தளர்த்தி பிரதமர் மோடி வழிவகை செய்துள்ளார்.
அலிகார் பல்கலைக்கழகத்தில் இதுவரை இஸ்லாமிய பெண்கள் துணைவேந்தராக இருந்ததில்லை. இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நாட்டின் அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை மோடி முன்னெடுத்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, விஜயகாந்துக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்படாமல் அவமதிக்கப்பட்டதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழிசை, ‘‘படிப்படியாக ஒவ்வொருவருக்கும் அறிவிக்கப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த் மீது பிரதமருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது’’ என்று தமிழிசை தெரிவித்தார்.