புதுச்சேரி: தேர்தல் பிரசாரத்திற்காக 7 அடி உயரம், 6 அடி அகலத்தில் மெகா சைஸ் பானைகளை புதுச்சேரி கலைஞர்கள் செய்து அனுப்பி வைத்தனர். தமிழகம், புதுச்சேரியில் வரும் 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 13 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் வி.சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த கட்சியின் தேர்தல் சின்னம் `பானை’. மக்களிடம் இந்த `பானை’ சின்னத்தை கவர வைக்க பெரியளவில் பானையை செய்து அனுப்ப புதுச்சேரியை சேர்ந்த பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் முடிவு செய்தார். இதற்காக வில்லியனூரை சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரிடம் 6 பானைகள் செய்வதற்காக 3 நாட்களுக்கு முன்பு ஆர்டர் செய்திருந்தார். இதனை தொடர்ந்து, 4 கலைஞர்கள் இரவு பகல் பாராது உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்து முடித்துள்ளனர்.
இந்த பானைகள் ஒவ்வொன்றும் 7 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டவை. இந்த சைஸ் பானை செய்வது இது தான் முதன்முறை. புதுச்சேரியில் தயாரான இந்த மெகா சைஸ் பானைகள் நேற்று மாலை சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு பானை, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. இதேபோல், விழுப்புரம் மக்களவை தொகுதிக்கும் பானைகள் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.