சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. மீதியுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
இந்த நிலையில் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்து வருகிறது. அதன்படி திமுக சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அதன்படி, சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 6வது முறையாக போட்டியிடுகிறார். அது போல் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 2வது முறையாக போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் விசிக போட்டியிடுகிறது. தொடர்ந்து 6-வது முறையாக சிதம்பரத்தில் போட்டியிடும் திருமாவளவன், கடந்த 2009 மற்றும் 2019 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை திமுக கூட்டணியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களும் தொகுதிகளும்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – நாமக்கல் -சூரியமூர்த்தி
இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி – ராமநாதபுரம் – நவாஸ் கனி
மதிமுக – திருச்சி – துரை வைகோ
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
திருப்பூர் – கே.சுப்புராயன்
நாகப்பட்டினம் – வை.செல்வராஜ்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
திண்டுக்கல் – சச்சிதானந்தம்
மதுரை – சு. வெங்கடேசன்