புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இதுவரை 221 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியை சேர்ந்த 31 பேருக்கு மரபணு பரிசோதனையும், 5 பேரிடம் குரல் மாதிரி சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கில் வேங்கைவயலை சேர்ந்த போலீஸ்காரரை 23ம் தேதி (இன்று) விசாரணைக்கு புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இவரிடம் ஏற்கனவே டிஎன்ஏ பரிசோதனை, குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தனியாகவும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சம்மன் பெற்ற போலீஸ்காரர் இன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி கல்பனா முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.