வேலூர்: வேலூர் மாநகராட்சி முள்ளிப்பாளையத்தில் தொடக்கப்பள்ளியை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மாணவர்கள் கோவிலில் தங்கி பாடம் கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சில பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக வேலூர் மாநகராட்சி முள்ளிப்பாளையம் பகுதியில் தொடக்கப்பள்ளியை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் அப்பகுதியில் உள்ள கோவில்களில் பயின்று வருகின்றனர்.
ஆண்டுதோறும் மழைகாலங்களில் இதேநிலை நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மேயர் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து மழைநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்று வேலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால் மழைநீரை அகற்றும் பணியை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சிக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.