வேலூர்: வேலூர் பழைய பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே சுவாமி விவேகானந்தரின் 161வது பிறந்த நாள் விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட விவேகானந்தர் படத்துக்கு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் புஷ்பாஞ்சலி செலுத்தினார். பின்னர் அமைச்சர் வி.கே சிங் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி அதன் மூலம் கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வேலூர் விமான நிலையத்திலிருந்து விரைவில் சிறிய ரக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்படும்’ என்றார்.