வேலூர்:கைதி தற்கொலை எதிரொலியாக வேலூர் சிறைகளில் தாழ்வான ஒயர், கயிறு அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி(37). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ராணிப்பேட்டை மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, முணியாண்டி, சந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். முனியாண்டி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 3ம்தேதி சிறையில் உள்ள ஒரு பயன்படுத்தாத அறையில் முனியாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், போக்சோ கைதி தற்கொலை விவகாரத்தில் அங்கு பணியில் இருந்த 2 தலைமை காவலர்கள், ஒரு முதுநிலை காவலர் உட்பட 3 சிறைக்காவலர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து, வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் தாழ்வாக உள்ள ஒயர், கயிறு உள்ளிட்டவற்றை அகற்ற சிறை காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிறைத்துறை போலீசார் கூறுகையில், ‘கைதி தற்கொலை எதிரொலியாக வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் தாழ்வாக உள்ள ஒயர் மற்றும் கயிறுகள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கைதிகளுக்கு எட்டாத வகையில் உயரமாக கட்ட வேண்டும். மேலும், சிறைக்குள் தற்கொலை முயற்சிக்கு உதவும் கத்தி, கூர்மையான பொருட்களை அகற்ற வேண்டும். குறிப்பாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விவரம் சரியாக உள்ளதா என்பதை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.