Friday, May 10, 2024
Home » வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்: பணிகள் நிறைவடைந்து விரைவில் சோதனை ஓட்டம்; 15 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறுகிறது; முக்கிய போக்குவரத்து முனையமாக மாறுகிறது; அதிகாரிகள் தகவல்

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்: பணிகள் நிறைவடைந்து விரைவில் சோதனை ஓட்டம்; 15 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறுகிறது; முக்கிய போக்குவரத்து முனையமாக மாறுகிறது; அதிகாரிகள் தகவல்

by Karthik Yash

* சிறப்பு செய்தி
வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில் சோதனை ஓட்டத்திற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் திட்டம் 1985ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக கொண்டு வர திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 1997ல் கடற்கரை முதல் மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.266 கோடியில் அமைக்கப்பட்டது. 2ம் கட்டமாக ரூ.877.59 கோடியில் மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை தொடங்கப்பட்டு 2007ல் முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 3ம் கட்டமாக 2008ல் ரூ.495 கோடியில் வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையே பணிகள் தொடங்கியது. மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரத்தில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனால் ஆதம்பாக்கம் பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. திட்டமிட்டப்படி பணிகள் 2010ல் முடியாததால் இதற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்தது. அதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னதாகவே புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இங்கு ரயில் பாதை சிக்னல் கட்டமைப்புகளும் முடிவடைந்தன. பணிகள் எஞ்சியுள்ள பகுதியில் தூண்கள் அமைத்து, அதற்குமேல் பாதைகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றன. பல்வேறு பிரச்னைகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் 15 ஆண்டுகளுக்கு பின் முடிவை எட்டியுள்ளது.

இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. சோதனை ஓட்டத்தை தொடர்ந்து சில வாரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வழித்தடம் பரங்கிமலை ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இதற்கான ரயில் பாதை, தற்போது அமைக்கப்படும் வேளச்சேரி பறக்கும் ரயில் பாதைக்கு மேல் உயர்மட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. எனவே, இதைப் பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கும். அத்துடன், பறக்கும் ரயில், கடற்கரை – தாம்பரம் ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிகள், ரயில் மாறி பயணம் செய்வதற்கு பரங்கிமலை ரயில் நிலையம் ஒரு முக்கிய முனையமாக மாறுகிறது.

இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உயர் அதிகாரி கூறுகையில், சென்னையில் அடுத்தகட்ட போக்குவரத்து வளர்ச்சியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கியமானதாக மாறி வருகிறது. அந்த வகையில் பரங்கிமலையில், மேம்பால மின்சார ரயில்பாதை இணைப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். 15 ஆண்டுகளாக பிரச்னையில் இருந்த வந்த பறக்கும் ரயில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வேளச்சேரி முதல் ஆதம்பாக்கம் வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.730 கோடியில் பணிகள் நடைபெற்றது. ஆனால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.30 கோடி செலவிடப்பட்டது.

இந்த ரயில் பாதை கடற்கரை முதல் தாம்பரம் புறநகர் மின்சார ரயில் பாதையின் மேல் அமைகிறது. அதனை தொடர்ந்து இந்த திட்டத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்க தயாராக உள்ளன. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரம்மாண்டமான தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளதால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்றப்பட்டு இன்னும் சில வாரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

* தென் சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பில் இருந்த வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் திட்டம் இன்னும் சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
* பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியின் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏற்கனவே 250 மீட்டர் தூரத்திற்கு 18 தாங்கும் பாலங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 36 தாங்கும் பாலங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
* இந்த திட்டத்தை தொடர்ந்து பரங்கிமலையில் பறக்கும் ரயில் திட்டம், மின்சார ரயில் திட்டம் மற்றும் மெட்ரோ ரயில் என மும்முனை நிலையமாக அமைகிறது.
* இந்த திட்டத்தின் மூலம் பேருந்தில் பயணம் செய்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமானது, ரயில் பயணிப்பதன் மூலம் தவிர்க்கப்படும். மேலும் ஆட்டோவிற்கு வழங்கப்பட்டு வந்த கட்டணத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
* இதைப் பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கும். அத்துடன், பறக்கும் ரயில், கடற்கரை-தாம்பரம் ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிகள், ரயில் மாறி பயணம் செய்வதற்கு பரங்கிமலை ரயில் நிலையம் ஒரு முக்கிய முனையமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
* மெட்ரோ ரயில் பணிக்காக அப்பகுதியில் பாலங்கள் அமைக்கப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து, பறக்கும் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ பாலம் என ஈரடுக்கு மேம்பாலங்களுடன் அனைத்து வசதிகள் கொண்ட பகுதியாக மாறுகிறது.

You may also like

Leave a Comment

4 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi