சென்னை: வாகன வேகக் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை:
சென்னை நகருக்குள், மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ள வேகக் கட்டுப்பாடான 40 கி.மீ. என்பதை, அத்தியாவசிய சேவையான போக்குவரத்தை கருத்தில் கொண்டு, மறுபரிசீலனை செய்து, உரிய ஆய்வுகளுடன், உயர்த்த வேண்டும். இரு சக்கரம், ஆட்டோ ஓட்டுனர், டெம்போ, லாரி ஓட்டுனர் மற்றும் மருத்துவ சேவையின் தேவைக்காகவும் இக்கட்டுப்பாட்டினை அவசர தேவையாக கருதி மீறுகின்ற போது, அதனால் அபராத கட்டணம் செலுத்தும் நிலை உருவாக்கப்பட்டு மிகப் பெரும், வாழ்வாதார சிக்கலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். பொதுமக்களின் போக்குவரத்து போன்றவற்றை ஆய்வு செய்து, தற்போது அறிவித்துள்ள வேகக்கட்டுப்பாட்டினை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.