சென்னை: தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வாங்கித் தருவதாக சொல்லி பணம் பறித்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை தலைமை செயலகத்தில் நேற்று உள்துறை செயலாளர் அமுதாவை சந்தித்து புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சீமான் மீது அதிமுக ஆட்சியின்போது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கினுடைய விவரங்கள் எதையும் குறிப்பிடாமல் மக்களுக்கு மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதை வெளிப்படையாக சொல்லி இருந்தால் 6 சதவீத மக்கள் அவருக்கு வாக்கு அளித்திருக்க மாட்டார்கள்.
ஈழத் தமிழர்களை ஏமாற்றி பணம் பறிக்கும், வியாபார நோக்கத்தோடு சீமான் மற்றும் அவர் கட்சியின் பொறுப்பாளர்கள் குடியுரிமை வாங்கித் தருவதாக சொல்லி ஈழத்தமிழர்களிடம் அதிகப்படியான பணத்தை வசூல் செய்துள்ளனர்,
அதற்கான ஆடியோவை நான் வெளியிட்டுள்ளேன். சீமான் ஈழத் தமிழர்களை அரசியல் பிழைப்புக்காக ஏமாற்றி பணம் பறித்து அரசியல் நடத்துகிறார். இதற்காக உரிய முறையில் விசாரணை குழு அமைத்து அவர் மீதும், அவர் கட்சி பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.