வத்தலக்குண்டு: வத்தலகுண்டு-கணவாய்ப்பட்டி சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு கருப்பு, வெள்ளை வண்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு-கணவாய்ப்பட்டி சாலையில் வேகத்தடைகள் பல உள்ளன. இந்த வேகத்தடைகள் இரவில் பிரதிபலிக்கும் வகையில் அவற்றின்மீது ஏற்கனவே கருப்பு, வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் போக்குவரத்து காரணமாக கருப்பு, வெள்ளை வண்ணம் மங்கியது.
இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் வேகத்தடைகள் இருப்பதையறியாமல் விபத்துக்குள்ளாகி வந்தனர். இதனால் வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி, வேகத்தடைகளில் கருப்பு, வெள்ளை வண்ணம் தீட்ட வலியுறுத்தி நெடுஞ்சாலை துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையையேற்று கணவாய்ட்டி சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு கருப்பு, வெள்ளை வண்ணம் தீட்டும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். இப்பணிகளை வத்தலகுண்டு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் வீரன், உதவி பொறியாளர் தாமரைமாறன் மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.