வத்தலக்குண்டு, பிப். 8: வத்தலகுண்டு பேரூராட்சி சார்பாக மக்களை தேடி சென்று குறைகளை கேட்கும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணை தலைவர் தர்மலிங்கம், நகர செயலாளரும், பேரூராட்சி கவுன்சிலருமான சின்னதுரை, பேரூராட்சி கவுன்சிலர்கள் மருதன், சிவகுமார் ஆகியோர் இடம் பெற்றனர். இக்குழுவினர் பேரூராட்சி 4வது வார்டு விவேகானந்தர் நகர் கோவிந்தசாமி தியேட்டர் பின்புறம் உள்ள தெருவில் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டனர்.
அவர்களோடு அந்த வார்டு கவுன்சிலர் அஜிஸ்உடன் சென்றார். அப்போது அங்கிருந்த மக்கள், ஆபத்தான நிலையில் இடையூறாக உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கூறினர்.
அதற்கு பேரூராட்சி தலைவர் உடனடியாக மின்வாரியத்துக்கு போன் செய்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டார். மேலும் கழிவுநீர் வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு உடனடியாக உடன் வந்த மேஸ்திரியிடம் கழிவுநீர் கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்ற கூறினார்.
பின்னர் 3வது பெத்தானியபுரம் சென்றனர். அங்கிருந்த வார்டு கவுன்சிலர் அழகுராணி முருகனை அழைத்து கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
அவர்களோடு மேஸ்திரிகள், தூய்மை பணியாளர்கள் உடன் சென்றனர். மக்கள் சொல்லும் குறைகளை குறிப்பேட்டில் பேரூராட்சியின் குறித்து கொண்டனர். பேரூராட்சியினரின் இந்த புதிய திட்டத்தை பொதுமக்கள் பாராட்டினர்.