காலாப்பட்டு: சென்னையில் இருந்து நேற்று அதிகாலை தமிழ்நாடு அரசு விரைவு பஸ் கும்பகோணத்துக்கு புறப்பட்டது. அரியலூரை சேர்ந்த டிரைவர் ராஜராஜன் ஓட்டினார். அதிகாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோட்டக்குப்பம் அருகே பிள்ளைசாவடி கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரில் (சென்டர் மீடியன்) பலத்த சத்தத்துடன் பஸ் மோதியது.
தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். இதில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது பற்றி கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.