தருமபுரி: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை திமுக அரசு சட்டப்பூர்வமாக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; சிப்காட் தொழிற்சாலையில் ரூ. 1 1 கோடியில் சாலை அமைத்து தரப்பட்டுள்ளது. மொரப்பூர் – தருமபுரி இடையே அகல ரயில்பாதை அமைக்கப்படும். சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும் எனவும் முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
தமிழ்நாட்டை பின்பற்றி கனடா அரசும் காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்துகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் சொன்னதைச் செய்யும் திமுக அரசு. தருமபுரி வேட்பாளர் மணியை பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும். பாஜக -பாமக கூட்டணி ஒரு முரண்பாடான கூட்டணி . சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது பா.ம.க.வின் கோரிக்கை விடுத்துள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுத்தும் பாஜகவுடன் பாமக ஏன் கூட்டணி வைத்தது?. வன்னிய சமூக மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் செயல்பட்டது முந்தைய அதிமுக அரசு.
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை திமுக அரசு சட்டப்பூர்வமாக்கும். தேர்தல் ஆதாயம் கருதி அவசர கதியில் 10.5% இட ஒதுக்கீட்டு சட்டமியற்றியது அதிமுக. கலவரம் நடைபெற்ற மணிப்பூரை பிரதமர் மோடி எட்டிக்கூட பார்க்கவில்லை. மணிப்பூரை சேர்ந்த 20 வீரர்களின் அனைத்து செலவுகளையும் திமுக அரசே ஏற்றது. ஒன்றிய மோடி ஆட்சியில் அரசின் ரூ.7.5 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. பி.எம்.கேர்ஸ் திட்டத்திலும் பல்லாயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது.
நாட்டு மக்களை வஞ்சிக்கும் பாஜகவுக்கு தேர்தலில் பதிலடி கொடுப்போம். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளையும் அவர்களின் எஜமானர்களையும் விரட்டுவோம். 40க்கு 40 தொகுதிகளையும் வென்று கலைஞருக்கு வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம் இவ்வாறு கூறினார்.