திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்றிரவு சென்னை வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக இரவு நேரங்களில் பெய்துவரும் கனமழை காரணமாகவும் தமிழகம் ஆந்திரா வனப்பகுதிகளில் பெய்யும் கனமழையாலும் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வாணியம்பாடியில் உள்ள பாலாற்றில் இருகரைகளை தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. திம்மம்பேட்டை, ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.