புதுடெல்லி: உலகளவில் பயங்கரமான அமைப்பாக கருதப்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களில் சிலர் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தங்கி இருந்து இந்தியாவில் பெரிய நாசவேலைகளை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டுவதாகவும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் மகாராஷ்டிராவின் பட்கா-போரிவலி, தானே மாவட்டத்தில் 31 இடங்கள், மீரா ரோடு, புனே மற்றும் கர்நாடகா, பெங்களூரு உள்பட 44 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் உள்பட 15 பேரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தியாவில் அமைதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து, இந்திய அரசுக்கு எதிராக போரை தூண்ட திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.