*விளையாட்டு போட்டிக்கு சென்று திரும்பியபோது விபத்து
திட்டக்குடி : வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த குங்ஃபூ விளையாட்டு பயிற்சி பள்ளி மாணவர்கள் 27 பேர் நாகர்கோவிலில் கடந்த 24, 25ம் தேதிகளில் நடந்த குங்ஃபூ போட்டிகளில் பங்கேற்று விட்டு, வேனில் மீண்டும் சொந்த ஊருக்கு நேற்று அதிகாலை திரும்பினர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது, அங்கு சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக வேனின் பக்கவாட்டு பகுதி மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 27 பேர் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் சுப்ரமணியன்(60), மாணவர்கள் திலீபன்(9), மோகன்(6), சான்ட்ரோ மெர்லின்(14), நந்தேஷ்(15), பயிற்சியாளர் சினேகா(24) ஆகிய 6 பேர் மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.