டெல்லி:மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார். அவரது 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சதைவ் அடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், அதிமுக எம்.பி. தம்பிதுரை, பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யா ஆகியோரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.