சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது வைத்திலிங்கம் ஊழல் செய்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 314 நலிவடைந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சத்திற்கான குடும்ப நல நிதியை வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே பி முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; ஈபிஎஸ் தலைமையில் அதிமுக தோல்விகளை சந்தித்தது என்றால் அதற்கு ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் தான் காரணம்.
வைத்திலிங்கத்திற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பிற்கு கையெழுத்து போட்டு கொடுத்தவனே நான்தான். அமைச்சராக இருந்த போது ஜெயலலிதாவை ஏமாற்றிவர்தான் வைத்திலிங்கம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த போது ஜெயலலிதாவுக்கே தெரியாமல் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்க கமிஷன் கேட்டு ஊழல் செய்துள்ளார். அது வெளியே வந்து அதில் ஒரு அதிகாரியும் சிக்கியுள்ளார். நிச்சயமாக அந்த அதிகாரி வைத்திலிங்கத்தை காட்டி கொடுப்பார். ஊழல் பணத்தில் தஞ்சையில் 2000 ஏக்கர் நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை வைத்திலிங்கம் வாங்கியிருப்பதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.