திருமலை: வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு திருப்பதி கோயிலில் வரும் 19ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்க உள்ளதால் அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 23ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி, டிசம்பர் 19ம் தேதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் (சுத்தம் செய்யும் பணி) நடைபெற உள்ளது. எனவே அன்று விஐபி தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.எனவே டிசம்பர் 18ம் தேதி (நாளை மறுதினம்) எந்தவித முக்கிய பிரமுகர்கள் பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதனை பக்தர்கள் அறிந்து வர வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 71,037 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,635 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.89 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 10 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து தரிசனம்செய்தனர்.