உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்கள் நடந்த தீவிர மீட்பு பணி வெற்றிகரமாக நிறைவடைந்து, 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர். அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். இதனால் அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி நாடே மகிழ்ச்சியடைந்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினருக்கு தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சினூக் ரக ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர்களுக்கு உயர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறினார். மேலும் அவர் கூறுகையில், ‘சில்க்யாரா சுரங்கப்பாதையின் பாதுகாப்பு தணிக்கை நடத்தப்படும். 4.5 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை திட்டத்தில் பணியை தொடர்வதற்கு முன் தேவையான பழுதுபார்ப்பு மேற்கொள்ளப்படும். இந்த முறை சுரங்கப்பாதையின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்றார்.