டேராடூன்: உத்தரகாண்டில் 2 நாள் நடக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரகாண்ட் மாநிலம் தொழில் வளர்ச்சி அடைய மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு டிசம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறும் என அவர் ஏற்கனவே அறிவித்தார்.
இதையொட்டி,முதலீட்டாளர்களை கவருதற்காக நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி,சென்னை, பெங்களூரு,அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களிலும் துபாய், லண்டன் போன்ற வெளிநாடுகளிலும் முதல்வர் புஷ்கர் சிங் ரோட் ஷோ நடத்தினார். டெல்லியில் நடத்திய ரோட் ஷோவில் ரூ.26,575 கோடிக்கான ஒப்பந்தம்,சென்னையில் ரூ.10,150 கோடி,பெங்களூருவில் ரூ.4600 கோடி, அகமதாபாத்தில் ரூ.24,000 கோடியும், மும்பையில் ரூ.30,200 கோடிக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியது. மேலும் லண்டனில் ரூ.12,500 கோடியும். துபாயில் ரூ.15475 கோடிக்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த ரோட் ஷோக்களில் முதல்வர் புஷ்கர் சிங் கலந்து கொண்டார்.
இந்நிலையில், டேராடூனில் 2 நாள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. இன்று காலை 10.30 மணிக்கு டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நடக்கும் மாநாட்டை மோடி தொடங்கி வைக்கிறார். அமைதியில் இருந்து செழிப்பிற்கு என்ற கருப்பொருளில் நடக்கும் மாநாட்டில் ஏராளமான முதலீட்டாளர்கள், தொழில்துறையினர் கலந்து கொள்கின்றனர்.
முதல்வர் புஷ்கர் சிங் கூறுகையில்,‘‘ உத்தரகாண்ட் மாநிலத்தை புதிய முதலீட்டு மையமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும் இது. ரூ.2.5 லட்சம் கோடிக்கான முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்கான பணிகளும் நடந்து வருகிறது’’ என்றார்.