வாஷிங்டன்: அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டுமென இந்தியா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்துவதாக அமெரிக்கா கூறி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் நேற்று முன்தினம், ‘மோடியின் இந்தியாவில், தங்கள் சொந்த நிலத்தில் அந்நியர்களான முஸ்லிம்கள்’ என்கிற தலைப்பில் சிறப்பு கட்டுரை வெளியானது.
இது குறித்து, அமெரிக்க வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லரின் நேற்று செய்தியாளர்கள் கேட்ட போது, ‘‘தனிப்பட்ட நாடுகளுடனான கருத்து பரிமாற்றம் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால், உலகெங்கிலும் உள்ள மதம், நம்பிக்கைகளுக்கான உரிமை, மரியாதையை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் அமெரிக்கா ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது.
எனவே, அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வலியுறுத்தி வருகிறோம்’’ என்றார். நியூயார்க் டைம்ஸ் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, அது தவறான புரிதல் என கூறி உள்ளது. அதே சமயம் யாரையும் சிறப்பு குடிமக்களாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை எனவும் பிரதமர் மோடி சமீபத்திய பேட்டியில் தெளிவுபடுத்தி உள்ளார்.