சோன்பத்ரா: உ.பி. மாநிலம் சோன்பத்ரா மாவட்டம், துதி சட்ட பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் ராம் துலார் கோண்ட் . பாஜவை சேர்ந்த இவர் கடந்த 2014ம் ஆண்டு இவர் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பான வழக்கு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி அசன் உல்லா கான்,‘‘ ராம் துலாருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
ராம் துலாரின் வழக்கறிஞர் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் சிறுமியின் குடும்பத்துக்கு உதவி அளிக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து ராம் துலார் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்றவழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெறுகிறவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அதன் பிறகு 6 ஆண்டுகள் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.