சென்னை: ஒன்றிய பாஜ அரசு மிகப்பெரிய ஊழலில் சிக்கியிருக்கிறது. இதில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசுகிறார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றுஅளித்த பேட்டி: ஒன்றிய பாஜக அரசு மிகப்பெரிய தேர்தல் பத்திர ஊழலில் சிக்கியிருக்கிறது. அதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கு பிரதமர் பல்வேறு வகைகளில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசுகிறார். கன்னியாகுமரியில் மீனவர்கள் பாதுகாப்பு என்று பிரதமர் சொல்கிறார். உங்கள் அரசியல் சாதுர்யம் மூலமாகவோ, மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பு மூலமாகவோ கச்சத்தீவை மீட்டு எடுப்பதற்கு ஏதாவது முயற்சி செய்தீர்களா?
2018ல் பாஜ ஆட்சி இருக்கும் பொது தான் முதல் முறையாக இலங்கை நம் மீனவர்களிடம் இருந்து கைப்பற்றிய படகுகளை விலைக்கு விற்று தேசியமயமாக்கினார்கள். அதை வாய்முடி மவுனியாக மோடி அரசு பார்த்து கொண்டிருந்தது. நாட்டில் கைப்பற்றப்பட்ட படகை வாங்கி கொடுக்க துப்பு இல்லாத ஒரு பிரதமர், மீனவர்களை பாதுகாப்போம் என்று சொல்லியிருக்கிறார். ஓக்கி புயல் வந்தது. கன்னியாகுமரியில் எவ்வளவோ மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் அழுகுரலை கேட்டு அவர் வரவில்லை. அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வந்தார். அதற்கு அப்புறம் காலம் கடந்து மோடி வந்தார். கன்னியாகுமரியில் பாதிப்பு இல்லை.
மேற்கு கடற்கரையில் தான் பாதிப்பு என்று அந்த பகுதிக்கே செல்லாமல், கன்னியாகுமரி விருந்தினர் இல்லத்தில் ஹெலிபேடில் இறங்கி புகைப்படம் கண்காட்சியை மட்டும் பார்த்து விட்டு சென்று விட்டார். 10 ஆண்டுகாலம் எதையும் செய்யவில்லை. இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் இலங்கையில் 28 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளார்கள். திரும்ப திரும்ப முதல்வர் அங்குள்ள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீட்டு தாருங்கள் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பாக சவுதி அரேபியாவில் மாட்டியிருந்தவர்களை திமுக அயலக அணியும், வெளிநாடுவாழ் தமிழர்களும் இணைந்து மீட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரதமர் எப்படி மீனவர்களை பாதுகாப்பார் என்று தெரியவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.