புதுடெல்லி: பீகாரில் பாஜ கூட்டணியில் இருந்த ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தலைமையிலான லோக் ஜனசக்திக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் பாஜ மீது அதிருப்தி அடைந்த ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் நேற்று முன்தினம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் பிரதமரின் பரிந்துரை ஏற்று பசுபதி குமாரின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். அவர் வகித்து வந்த உணவு பதப்படுத்துதல் துறை பொறுப்பை, ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.