சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஏழு பொறியியல் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மேம்பட்ட 5ஜி ஆய்வகங்களை அமைக்க ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி (சிஇஜி), சாஸ்த்ரா, என்ஐடி-திருச்சி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி), எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி, சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி (எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி) ஆகியவை 5ஜி ஆய்வகங்களைப் பெற உள்ளன. ஆய்வகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 5ஜி ஸ்டாண்ட் அலோன் நெட்வொர்க் (மிட் பேண்ட்), 5ஜி சிம், டாங்கிள்ஸ், ஐ.ஓ.டி கேட்வே ஆகியவை இந்த ஆய்வகங்களில் பொருத்தப்படும்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், ‘‘இந்த ஆய்வகங்கள் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு 5ஜி சூழலைப் பயன்படுத்தி திட்டங்களைச்செய்ய உதவும்’’ என்றார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு மேம்பட்ட மொபைல் தொழில்நுட்பங்கள் குறித்த விருப்ப பாடத்தை பல கல்லூரிகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன. 5ஜி ஆய்வகங்களை உருவாக்குவது, இயக்கம், உற்பத்தி, விவசாயம், சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்பாடுகளை உருவாக்க உதவும் என்று கூறினார். ஆய்வகம் அமைப்பதற்கான மூலதன செலவில் 80%, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு 100% செயல்பாட்டு செலவினங்களுக்கு அரசாங்கம் நிதியளிக்கும். மூலதனச் செலவில் 20% நிறுவனங்கள் செலவிட வேண்டும்.
மேலும், இந்த நிறுவனம் இணையம், இன்டர்நெட் இணைப்பு மற்றும் தொழில்நுட்ப மனிதவளத்தையும் வழங்க வேண்டும். சோதனை மற்றும் திட்ட மேலாண்மைக்காக ஆய்வகத்தைப் பயன்படுத்தி குறைந்தது 50 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஐந்து ஸ்டார்ட் அப்கள் அல்லது எம்.எஸ்.எம்.இ க்கள் ஆய்வகத்தில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என சாஸ்த்ரா பல்கலை துணைவேந்தர் வைத்தியசுப்பிரமணியம் தெரிவித்தார்.