சென்னை: ஒன்றிய அரசின் போர்ட் டிரஸ்ட் நிர்வாகம் 12 கோடி ரூபாய் அளவுக்கு வரிப்பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பாரிமுனை அருகே ஒன்றிய அரசின் சென்னை துறைமுக நிர்வாகம், ரூ.12.5 கோடி வரிபாக்கி வைத்துள்ளது. ரூ.12.5 கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அலுவலக முகப்பில் நோட்டீஸ் ஒட்டினர். ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்தாததால் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பிட்ட அவகாசத்துக்குள் சென்னை துறைமுக நிர்வாகம் வரி செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரூ.10.3 கோடி நிலுவை, நடப்பாண்டில் ரூ.2.2 கோடி வரி என சென்னை துறைமுக நிர்வாகம் மொத்தமாக ரூ.12.5 கோடி பாக்கி வைத்துள்ளது. இதுகுறித்து அலுவலக முகப்பில் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறை ஒட்டியுள்ள நோட்டீசில், இக்கட்டடத்தின் உரிமையாளர் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியினை இந்நாள் வரையில் செலுத்தவில்லை.
எனவே, இந்த அறிவிப்பினை கண்டவுடன் சொத்துவரி நிலுவையினை உடனடியாக செலுத்திட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ( திருத்தம் ) சட்டம் 1995, பிரிவு 116-Aன் படி சொத்துவரி நிலுவையினை வசூலிக்க உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.