இம்பால்: ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மணிப்பூர் முதல்வர் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்களால், அந்த மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். மாநிலத்தில் அமைதியற்ற சூழல் நிலவி வருவதால், அம்மாநில பாஜக முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான அமைச்சரவை மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
மேலும், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியானதாக கூறப்பட்டது. இதுகுறித்து முதல்வர் பிரேன் சிங் கூறுகையில், ‘நாங்கள் எங்களது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது. எங்களது மக்களையும், மாநிலத்தையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கையை எடுப்போம். யாருக்காக ஆட்சியை நடத்துகிறோம் என்பதை நாம் உணர வேண்டும். அதேநேரம் குறிப்பிட்ட பிரச்னையில் அரசியல் செய்வது சரியாக இருக்காது. சிலரின் குரல்களுக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது. அவ்வாறு செவிசாய்த்தால், நிலைமை என்னவாகும் என்பதையும் யோசிக்கிறோம்’ என்று கூறினார்.