சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய பாஜ அரசு சிறுபான்மையினர் மீதான வன்மத்தோடு இந்தாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தி விட்டது. அதோடு, மவுலானா அபுல்கலாம் ஆசாத் பெலோஷிப்பையும், வெளிநாட்டில் பயிலும் சிறுபான்மை மாணவர்கள் பெறும் கடனுக்கான வட்டிக்கு அளித்து வந்த மானியத்தையும் ரத்து செய்து விட்டது.
எனவே, சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது அமலில் உள்ளபடி, எந்த உதவித் தொகையும் ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து இதுவரை வரவில்லை. சிறுபான்மையினர் மீதான வன்மத்தினால் ஒன்றிய அரசாங்கம் நயவஞ்சகமாக சிறுபான்மை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் இந்த உதவித் தொகைகளை நிறுத்தி வைப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, ஒன்றிய அரசின் உரிய அதிகாரிகளோடு தமிழ்நாடு அரசு தொடர்பு கொண்டு இந்த கல்வி உதவித் தொகைகளை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.