திருச்சி: இந்தியா 2047ல் வல்லரசு நாடாக உருவெடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ஒன்றிய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி ரோஜ்கர் மேளாவை (வேலைவாய்ப்பு திருவிழா) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி 6வது ரோஜ் கார் மேளா நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் திருச்சியில் நேற்று நடைபெற்ற ரோஜ்கர் மேளாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட ஒன்றிய அரசுத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 243 பேருக்கு ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் முருகன் ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
2014ம் ஆண்டு வரை 5 நகரங்கள்தான் மெட்ரோ சிட்டிகளாக இருந்தது. தற்போது இது 27 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் வீடு தோறும் குழாய் மூலம் சுத்தமான சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் 80 கோடி பேருக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு டிசம்பர் மாதம் வரை வழங்கப்படும். 500 ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இருந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 1 லட்சம் புதிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளை உருவாக்கியுள்ளோம். வரும் 2047ம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாக உருவெடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.