திருவனந்தபுரம்: கடந்த சில மாதங்களாக கேரள அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. ஒன்றிய அரசு தங்களுக்கு தரவேண்டிய நிதியை ஒதுக்காதது தான் இதற்குக் காரணம் என்று கேரள அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் நிதி நெருக்கடி காரணமாக பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் நேற்று வரை வழங்கப்படவில்லை. இது அரசு ஊழியர்களுக்கிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் மாதம் தொடங்கி 3 நாட்கள் ஆன பிறகும் சம்பளம் கிடைக்காததால் இன்று முதல் போராட்டம் நடத்த தலைமைச் செயலக ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர். ஒன்றிய அரசிடமிருந்து உடனடியாக வர வேண்டிய ₹4600 கோடி கிடைக்காததால் கேரளா அரசின் நிதி நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இந்த நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று கூறி ஒன்றிய நிதித்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.