கீவ்: ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா அணை உடைப்பால் பதற்றம் நீடிக்கும் நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். உக்ரைனின் கெர்சன் பகுதி ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது நோவா ககோவ்கா அணை. 98 அடி உயரத்தில் 3.2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள ரஷ்யா, உக்ரைன் தகர்த்துவிட்டதாக புகார் கூறி வருகிறது.
இதனிடையே உடைக்கப்பட்ட அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேறி வருவதால் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு படகுகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனிடையே ககோவ்கா அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான நிலைக்கு தள்ளி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.