சென்னை : சனாதனத்திற்கு எதிராக பேசுவதை நிறுத்தப் போவதில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 94வது அகில் இந்திய எம்சிசி முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் உதயநிதி பதக்கங்களை வழங்கினார். பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பேட்டி அளித்த அவர், சனாதனம் குறித்து தான் பேசிய பேச்சால் தற்போது அதுபற்றி இந்தியாவே பேசிக் கொண்டு இருக்கிறது என்று தெரிவித்தார். தமது பேச்சால் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் உதயநிதி, தான் இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று கூறியதாக பாஜகவினர் இட்டுக்கட்டி பரப்புகின்றனர் என்றும் சாடினார்.
I.N.D.I.A. கூட்டணியின் மும்பை கூட்டம் வெற்றி அடைந்துள்ளதால் அதை திசை திருப்பவே பாஜகவினர் இது போன்ற பொய்களை பரப்புவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். மேலும் பேசிய அவர், “சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்பது சமூகத்தில் எதுவுமே மாறாமல் எல்லாமே அப்படியே இருக்க வேண்டும் அதுவும் நிரந்தரமாக என வலியுறுத்துகிறது. மாறாக திராவிட மாடல் மாற்றத்தையும், சமூக சமத்துவத்தை வளர்க்கிறது. நான் சனாதன தர்மத்தைத் தான் எதிர்த்தேன். அதை ஒழிக்க வேண்டும் என்றுதான் கூறினேன். பாஜக எனது கருத்தைத் திரித்து போலி செய்திகளைப் பரப்புகிறது. அவர்கள் என்ன மாதிரியான வழக்குகள் தொடுத்தாலும் நான் அத்தனையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்,”என்றார்.