சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநில மாநாட்டில், பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: சென்னையின் முதல் மேயராக ஆ.பொ.அரசு இருந்த போது, திமுக மாநாடு நடத்தப்பட்டது. அடுத்து சென்னையில் 2வது மாநாடு நடந்தபோது நான் கலந்து கொண்டேன். இன்றைக்கு இங்கு நடக்கும் மாநாட்டில் இருப்பது போன்ற கூட்டத்தை நான் கண்டதில்லை. 1600 சதுரடி நீளத்திலும், 600 சதுரடி அகலத்திலும் 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைந்திருக்கிறது. இது போன்ற மாநாடு திமுக இயக்கத்தில் கண்டதில்லை என்று தோன்றுகிறது. தாய் கழகத்தை மிஞ்சும் அளவுக்கு இளைஞரணி மாநாடு நடப்பதை எண்ணி, பொதுச் செயலாளராக நான் பாராட்டுகிறேன். நூறாண்டுகள் கண்ட திமுக இயக்கத்திற்கு, 50 ஆண்டுகள் தலைவராக இருந்து கலைஞர் வழிநடத்தினார். தற்போது தளபதி மு.க.ஸ்டாலின், இந்த இயக்கத்தை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்கு பிறகு உரிமையோடு நான் சொல்கிறேன். அடுத்த கட்டத்திற்கான தலைமையை ஏற்று வழிநடத்துவதற்கு உதயநிதிக்கு தகுதி உண்டு. அதை நான் உரிமையோடு கூறுகிறேன். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.