கூடுவாஞ்சேரி: மீனம்பாக்கம் முதல் மறைமலைநகர் வரை இருசக்கர வாகனங்களை திருடி ஒஎல்எக்ஸ் ஆப் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்த வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் முதல் மறைமலைநகர் வரை உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் மற்றும் கடைகள் முன்பு தினந்தோறும் மணிக்கணக்கில் பார்க்கிங் செய்துவிட்டு அன்றாடம் வேலைக்கு சென்று விட்டு வருகின்றனர். இவர்களின், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் நாளுக்கு நாள் புகார் வந்த வண்ணம் இருந்தது.
இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்படை போலீசாருக்கு தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்பேரில், கூடுவாஞ்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் தலைமையில் போலீசார் ஊரப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பிடிபட்ட 2 பேரும் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததால் சந்தேகத்தின் பேரில் இருவரையும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர் இதில், பூந்தமல்லி அடுத்த மாங்காடு மெயின் ரோடு, மலையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசனின் மகன் மாரிராஜ் (31), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரத்தின் மகன் ஐயாபிள்ளை (30) இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை மீனம்பாக்கம் முதல் மறைமலைநகர் வரை உள்ள ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் கோயில்கள் மற்றும் கடைகள் முன்பு தினந்தோறும் மணிக்கணக்கில் பார்க்கிங் செய்துவிட்டு செல்பவர்களின் பைக்குகளை திருடி அதை ஒஎல்எக்ஸ் ஆப் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.
பின்னர், இது குறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இருவரையும் நேற்று கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களிடமிருந்து 18 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.