சாயல்குடி : சாயல்குடி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு டன் பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியில் கடல் மார்க்கமாக பீடி இலை கடத்தப்படுவதாக எஸ்பி தனிப்பிரிவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை வாலிநோக்கம் போலீசார், வாலிநோக்கத்தில் இருந்து கீழமுந்தல் செல்லும் சாலையிலுள்ள சீலா மீன் பிடி தளம் அருகே ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த ஒரு லாரி டிரைவர், போலீசாரை கண்டதும், லாரியை சாலையில் நிறுத்தி விட்டு தப்பித்து ஓடினார்.லாரியை சோதனையிட்டதில் 70 மூட்டைகளில் 2,100 கிலோ பீடி இலை இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.51 லட்சமாகும். வாலிநோக்கம் கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பீடி இலை, லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.