அங்காரா: துருக்கி நடத்திய வான்வழி தாக்குதலில் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலியாகினர். சிரியாவில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. சிரியா அரசுக்கும் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கும் முதலில் போர் மூண்டது. இதில் சிரியா அதிபர் பஷில் அல் அசாத்திற்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளையில், ஆரம்பத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது. தற்போது சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்துகிறது. ஆனாலும், அந்நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள், அவ்வப்போது துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளகளை துருக்கி பயங்கரவாதிகளாக கருதுகிறது. மேலும், கிளர்ச்சியாளர்களை குறிவைத்து துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.