மதுராந்தகம்: தினகரன் செய்தி எதிரொலியால், விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் லாரிகளை நிறுத்தக்கூடாது என்று டிரைவர்களுக்கு, மதுராந்தகம் போக்குவரத்து ஆய்வாளர் மணிமாறன் அறிவுரை வழங்கினார். சென்னை – திருச்சி மற்றும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில், மதுராந்தகம் பகுதியில் சாலை ஓரங்களில் லாரிகள் நிறுத்துவதை தடுக்க மதுராந்தகம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.
மேலும், சில தினங்களுக்கு முன்பு சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி ஒன்றின் மீது தனியார் பேருந்து மோதியதில், 4 கல்லூரி மாணவர்கள் உயரிழந்த சம்பவம் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்று மதுராந்தகம் காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் போலீசார் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்களை அழைத்தனர்.
அவர்களிடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நமது நாளிதழின் செய்திகளை சுட்டிக்காட்டி, இனியும் இந்த நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் நீங்கள் லாரிகளை நிறுத்தக்கூடாது, உங்களுக்கு என்று நெடுஞ்சாலை ஓரங்களில் ஒதுக்கப்பட்டு இருக்கும் இடங்களில் மட்டுமே லாரிகளை நிறுத்த வேண்டும், அதுவே அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு நீங்கள் சாலை ஓரங்களில் லாரிகளை நிறுத்துவதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றது.
இனியும் இதுபோன்று நிறுத்தக்கூடாது எனவும், அவ்வாறு நிறுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, நீங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தார். அப்போது லாரி டிரைவர்கள், இனி தாங்கள் இதுபோல லாரிகளை சாலையோரங்களில் நிறுத்த மாட்டோம் என உறுதியளித்து சென்றனர்.