புதுடெல்லி: நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அரசு பங்களாவை உடனே காலி செய்ய வேண்டும் என்று திரிணாமுல் மாஜி எம்பிக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணாமுல் எம்பியாக இருந்த மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அதையடுத்து அவர் கடந்த டிசம்பர் 8ம் தேதி எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். எம்பி என்ற முறையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை ஜன. 7ம் தேதிக்குள் காலி செய்யுமாறு அரசு எஸ்டேட் இயக்குநரகம் கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் அரசு பங்களாவை காலி செய்யவில்லை. மாறாக மீண்டும் மஹுவாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனிடையே அரசு பங்களாவை காலி செய்யுமாறு தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மஹுவா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜன. 4ம் தேதி அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவது தொடர்பாக எஸ்டேட் இயங்குநரகத்திடம் கோரிக்கை விடுக்குமாறு மஹுவாவுக்கு அறிவுறுத்தியது. இம்மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், ‘விதிவிலக்கான சூழ்நிலைகளில் சில சிறப்புக் கட்டணங்கள் பெற்றுக்கொண்டு ஆறு மாதங்களுக்கு உறுப்பினர்கள் பங்களாவில் தங்க வைக்க விதிகள் அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கின்றன’ என்றார்.
மேலும் மஹுவாவின் மனுவினை திரும்பப் பெறுவதற்கு அனுமதி அளித்த நீதிபதி, ‘மஹுவா கோரிக்கை மனு தாக்கல் செய்ய பின்பு அதன் மீது எஸ்டேட் இயக்குநரகம் சொந்தமாக முடிவு எடுக்கலாம். பங்களவாவில் குடியிருப்பவர்களை அங்கிருந்து காலி செய்வதற்கு முன்பு முறையாக அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அதையடுத்து அரசு பங்களாவை உடனடியாக காலி செய்யுமாறு அரசு எஸ்டேட் இயக்குநரகம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.