டெல்லி: பொய்களுக்குள் ஒளிந்து கொள்ளும் பிரதமர் மோடி என திரிணாமுல் காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது. அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயரில் வீர் சாவர்கர் விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; இந்தியாவின் சில கட்சிகளின் சுயநல அரசியலால், பெரு நகரங்களின் வளர்ச்சி தடைபட்டது. எதிர்கட்சிகளின் கூட்டம் ஊழலுக்கு கேரண்டி தரும் கூட்டம். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஊழல்வாதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர். குடும்பத்தால், குடும்பத்திற்காக அரசியல் செய்வதே எதிர்க்கட்சிகளின் கொள்கை.
ஊழல் வழக்குகள் சந்தித்தாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றன் மீது ஒன்று நற்சான்று வழங்குகின்றன என கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா; எதிர்க்கட்சிகளின் குடும்ப அரசியலை பற்றி பிரதமர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் ஹரியானாவிலும் தெலங்கானாவிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக குடும்ப வேட்பாளர்களைதான் நிறுத்தியது. பாஜகவின் எம்.பிக்களில் 12% பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீண்டும் கதை விடுகிறார் கட்டுக்கதை வீரர் என குறிப்பிட்டுள்ளார்.