திருச்சி: திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையில் எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நம்பர் ஒன் டோல்கேட் அருகே கொள்ளிடம் பாலத்தின் கீழ் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த நபர் 35 வயது மதிக்கத்தக்க பெண் என கண்டறிந்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில், கொலை செய்து பெண் எரிக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளிடம் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.