திருவனந்தபுரம்: திருச்சியிலிருந்து சார்ஜாவுக்கு நேற்று காலை 10.40 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 161 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தரையிறக்கப் பயன்படுத்தும் கியரில் திடீர் கோளாறு ஏற்பட்டது. அப்போது அந்த விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சற்று அருகே பறந்து கொண்டிருந்தது.
உடனடியாக விமானத்தின் பைலட் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலைய கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து திருவனந்தபுரத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது.இதையடுத்து விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. நண்பகல் 12 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் சார்ஜாவுக்கு புறப்படும் என்று திருவனந்தபுரம் விமானத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு உள்ளேயே தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து மாலை 5 மணியளவில் எந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டது. இதன் பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். தொடர்ந்து மாலை 6.40 மணியளவில் விமானம் சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றது.