Monday, May 20, 2024
Home » வாக்குறுதியை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல்

வாக்குறுதியை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல்

by Lakshmipathi

*செல்போன் டவரில் ஏறியும் போராட்டம்

திருச்சி : விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு போராடுவதற்கு பல்வேறு மாநில விவசாயிகள் தலைநகரை நோக்கி பேரணி முன்னெடுத்து உள்ளனர். அவர்களை உள்ளே விடாமல பல இடங்களில் ஆணிகள், முள் வேலிகள், சிமென்ட் தடுப்புகள், பேரிகார்டுகள் போன்றவற்றை போட்டு டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.

அவர்கள் தொடர்ந்து முன்னேற விடாமல் இருக்க கண்ணீர் புகை குண்டு வீசி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின்படி விவசாய விளைப்பொருட்களுக்கு இருமடங்கு லாபகரமான விலை வழங்காததை கண்டித்தும் திருச்சி தலைமை தபால் நிலையம் முன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடத்துவதற்காக விவசாயிகள் நேற்று வந்தனர். அப்போது தபால் நிலையத்துக்குள் விவசாயிகள் நுழையாதவாறு முன்எச்சரிக்கையாக பேரிகார்டுகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் தபால் நிலைய ரவுண்டானா அருகில் மத்திய பஸ் நிலையம் செல்லும் சாலையில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது விவசாயி ஒருவர், தனது கையில் மனிதமண்டை ஓடுகளை வைத்தவாறு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள செல்போன் டவரில் 50 அடி உயரத்துக்கு சங்க கொடியுடன் ஏறிய விவசாயிகள், அங்கிருந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதனை பார்த்த போலீசார், 5 பேரையும் செல்போன் டவரில் இருந்து இறங்கும்படி ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொண்டதின் பேரில் விவசாயிகள் 5 பேரும் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 60 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi