புதுடெல்லி: சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினர் பங்கை வெளிப்படுத்தும் வகையில் 10 சிறப்பு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி நேற்று டெல்லியில் துவங்கியது. இதில் இந்திய பண்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் சர்வதேச கண்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்து பேசுகையில்,‘‘ பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் பாரம்பரியம் அழிக்கப்பட்டது. அப்போது பல கையெழுத்து பிரதிகள்,நுாலகங்கள் எரிக்கப்பட்டன.
சுதந்திரத்திற்கு பிறகு நமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால் வரலாற்று கலை பொருட்களை பாதுகாப்பதை தங்கள் இயல்பாக கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அவர்கள் தங்கள் முன்னோர்கள், பெரியவர்களின் பொருட்களை பாதுகாக்க வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் புகழ் உயர்ந்து கொண்டே இருப்பதால் பழங்கால இந்திய கலை பொருட்களை வெளிநாடுகள் நமக்கு திருப்பி தர முன்வந்துள்ளன. சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கை வெளிப்படுத்தும் வகையில் 10 சிறப்பு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்’’ என்றார்.