பெங்களூரு: விசாரணை நீதிமன்றங்கள் ‘சிறப்பு வகை தண்டனை’ அல்லது ’சாகும் வரை ஆயுள் தண்டனை’ ஆகிய தண்டனைகளை விதிக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கூறியுள்ளது. கள்ளக்காதலியின் கணவனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு செசன்ஸ் நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.சோமசேகர் மற்றும் ராஜேஷ் ராய் அமர்வு, சாகும் வரை ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் மட்டுமே விதிக்க முடியும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி விசாரணை நீதிமன்றங்கள் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்று தெரிவித்தது.