வளசரவாக்கம்: சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் நேற்று முன்தினம் இரவு திருநங்கை ஒருவர் வாகன ஓட்டிகளிடம் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3 போதை ஆசாமிகளிடமும் அவர் யாசகம் கேட்டதாக கூறப்படுகிறது. பிறகு 3 பேரும் திருநங்கையின் முகத்தில் கத்தியால் கீறி அவர் அணிந்து இருந்து ஒரு சவரன் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத திருநங்கை, சாலையிலேயே அழுது புலம்பினார். அப்போது, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சத்தம் கேட்டு திருநங்கையிடம் நடந்த விவரத்தை கேட்டனர்.
அவர் அளித்த தகவலின்படி, ைபக்கில் தப்பி சென்ற 3 பேரை, ரோந்து போலீசார் துரத்தி சென்று சிறிது தொலைவில் 3 பேரில் ஒருவரை மட்டும் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது, மதுரவாயல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) என்றும், இவர் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வரும் வழியில் பணம் கேட்ட திருநங்கையை, கத்தியால் கீறிவிட்டு செயின் பறித்ததும், தப்பி ஓடிய 2 பேர் மீது வழிப்பறி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. பின்னர், பிடிபட்ட மணிகண்டனை ரோந்து போலீசார் கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.